சந்தை ஒன்று கூடும் இடத்தில் ஓர் உயர்ந்த கல்லின் மீது ஏறி முல்லா நின்றுகொண்டிருந்தார். மக்கள் கூட்டம் சந்தையை நோக்கி போய்கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர். "அன்பார்ந்த நன்பர்களே ! உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான யோசனைகள் சில என்னிடம் இருக்கின்றன.
இவற்றை காதுகொடுத்துக்கேட்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அருள் கூர்ந்து சற்று நில்லுங்கள்" என்று முல்லா உரத்த குரலில் கூறினார். முல்லா என்ன சொல்லப்போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கு கூடிற்று. "நன்பர்களே கொஞ்சம் கூட உழைக்காமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபேக வாழ்வு வாழ உங்களில் எத்தனை பேருக்கு விருப்பம்? நான் அதற்கு வழி ஒன்று வைத்திருக்கிறேன் என்னுடைய யோசனையை கேட்கத் தயாராக இருப்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் மட்டும் கைதூக்குங்கள்" என்றார் முல்லா. அனேகமாக அங்கு நின்ற அனைவருமே கை தூக்கினர்.
"முல்லா ; உழைக்காமல் சுகபோகவாழ்வு வாழ வழி? தயவு செய்து கூறுங்கள் !" என்று கூச்சலிட்டனர். முல்லா தன் இருந்த அக்கல்லைவிட்டு கீழ் இறங்கி நடக்கத்தொடங்கினார். " என்ன முல்லா அவர்களே ஒன்றும் சொல்லாமல் செல்கிறீர்களே?" என்று மக்கள் கேட்டனர். " நன்பர்களே; நமது ஊரில் எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். என்னையும் சேர்த்து இந்த ஊரில் உள்ள எல்லோருமே சோம்பேறிகள்தான் என்ற உண்மை எனக்கு விளங்கிவிட்டது.
இனி எனக்கு இங்கே என்ன வேலை? போய்வருகிறேன்" என்று கூறியவாறே முல்லா செல்லத்தொடங்கினார். அங்கிருந்த மக்கள் திகைப்படைந்தவர்களாக முல்லா சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.